Saturday, 9 February 2008

Atonement -மனித உணர்வுகளின் நுண் கலவை





அண்மையில் எதேச்சையாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு படம் தபால் பெட்டியில் முகவரி மாறி வந்து விழுந்தது.அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்டு விட்டுப் பார்க்கும் மசாலாத் தமிழ்ப் படங்களைத் தவிர பார்க்க உருப்படியாக ஒன்றும் இல்லை என்னும் நிலையில், படம் எதுவுமே பார்க்காமலே இருந்த ஒரு பொழுதிலையே Attonement பார்க்கக் கிடைத்தது.

படத்தின் மூல நாவல் Ian McEwan என்னும் பிரித்தானிய எழுத்தாளரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகக் கருதப்பட்டு பல இலக்கிய விருதுகளைப் பெற்று ஆங்கில இலக்கிய விமர்சகர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தலை சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது.இலக்கிய வடிவத்தைப் பொறுத்தவரை metafiction, அதீதப் புனைவு (?) psychological realism உளவியல் மெய்மை(?) என்னும் யுக்திகள் கையாளப்பட்டு எழுதப்பட்ட நாவல்.

இவ்வாறான கனமான நாவல்களைப் படமாக்கும் போது எழுத்தில் இருக்கும் அனைத்தையும் சினிமா என்னும் ஒளி/ஒலி வடிவத்துக்குள் புகுத்துவது என்பது சிரமமானதாக இருக்கும்.சினிமாவுக்கென இருக்கும் சில நுட்பங்களைக் கொண்டே இவற்றை நேர்த்தியாகப் பிரதி செய்ய முடியும்.அந்த வகையில் Joe Wright இன் நெறியாள்கையும் Christopher Hampton இன் திரைக் கதையும் மூலத்தின் மென் உணர்வுகளைச் சிதைக்காமால் ஊடக மாற்றத்தைக் கச்சிதமாகச் செய்துள்ளன.

கதை முழுவதையும் எழுதி படத்தின் சுவாரசியத்தைக் கெடுத்து விடாமால் மேலோட்டமாகப் பார்த்தால், கதை 1930 களில் இருந்து தொடங்குகிறது.ஒரு வெம்மையான கோடை காலத்திலே ஆங்கிலேய உயர் குடி ஒன்றின் நாட்டுப்புற கோடைகால பங்களா ஒன்றில் பரபரப்பாக தயாராகும் ஒரு விரிந்து உபசாரத்துடன் ஆரம்பிக்கிறது.பிரயனி என்னும் ஒரு பதின்ம வயதுப் பெண் அந்த வீட்டின் சொந்தக்காரரின் மகள் அவளின் அக்கா சிசிலா.வீட்டைப் பராமரிப்பவரின் மகன் ரொபி.பிரித்தானிய உயர் குடியினருக்கும் அவர் தம் வேலை ஆட்களுக்கும் இருக்கும் உறவு நிலைக்குள் இருந்து ததும்பும் குழப்பமான காதலாக சிசிலாவுக்கும் ரொபிக்குமான காதல் இருக்கிறது.ரொபி சிசிலாவின் தகப்பனாரின் தயவினால் கேம்பிரிட்சில் சிசிலாவுடன் இலக்கியப் பட்டப் படிப்பைப் படித்துக் கொண்டிருகிறான்.

அந்த வெம்மையான நாளில் சிசிலாவுக்கும் ரொபிக்கும் இடையில் ஏற்படும் ஊடலான சம்பவம் ஒன்றை, பதின் மூன்று வயதானா பிரையனி பிழையாக விளங்கிக் கொள்கிறாள்.பிழையாக விளங்கிக் கொள்கிறாள் என்பதற்கு மேலாக அவள் அதனை ஏன் பிழையாக விளங்க முற்பட்டாள் என்பதற்கான உளவியற் காரணக்களும் படத்தில் நொன் லீனியராகச் அதாவது தொடர்பு அறுந்து சொல்லப்படுகிறது.படத்தின் முழுமையையும் பார்த்து சற்று நிதானித்தால் அதற்கான உளவியற் காரணம் பதின்ம வயதில் எழும் எதிர்ப் பாற் கவர்ச்சியும்,தனது சகோதரி மேல் எழும் சகோதரப் பகை உணர்வும் என விரியும்.படம் எடுக்கப்பட்ட முறையானது இந்த ஒரு சம்பவம் ஒரு முறை பிரயனியின் கோணத்தில் இருந்தும் இன்னொரு முறை கதை சொல்லியின் கோணத்தில் இருந்தும் காட்டப்படுகிறது.படத்தின் மையமான சம்பவங்கள் இப்படி மீண்டும் அழுத்தமாக தொடர்பு அறுந்து சொல்லப்படுவது கதாபாத்திரங்களின் உள் உணர்வை அவர்களின் மன ஓட்டத்தை அல்லது பார்வையை எமக்குச் சொல்லி கதாபாத்திரத்துடன் எம்மை ஒன்ற வைக்கின்றது.

அடுத்து அன்றைய இரவில் நடக்கும் பல சம்பவங்களின் தொடர்ச்சியாக விரிந்தினராக வந்த ஒரு பதின்ம வயதுக்காறி வன் புணர்வுக்கு ஆளாகிறாள்.இதனை ரொபியே செய்ததாகாவும் அதனைத் தான் பார்ததாகவும் பிரயனி கூறுகிறாள்.இதற்கு ரொபி ஒரு காமுகன் என்னும் அவளின் சுய உளவியற் கருத்தாக்கத்தை காரணமாக்குகிறாள். பிரயனியின் இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் ரொபி கைது செய்யப்பட்டு சிறை செல்கிறான்.மன முடைந்த சிசிலியா பிராயச்சிந்தமாக ஒரு தாதி ஆகிறாள். இரண்டாம் உலக யுத்த பிரித்தானியாவுக்குள் கதை நகருகிறது.ரொபி ஒரு இராணுவ வீரனாவதன் மூலம் சிறையில் இருந்து வெளி வருகிறான். நாசிகளுக்கு எதிரான யுத்ததிற்க்கு பிரான்சிக்கு அனுப்பப்படும் முன் சில நிமிடங்கள் சிசீலியாவைச் சந்திக்கிறான்.தனக்காகக் காத்திருக்குமாறு கூறி விடை பெறுகிறான்.

படம் பிரான்சின் கிராப்புறங்களுக்கு நகருகிறது.இந்த யுத்தம் எமது அல்ல என்னும் உரையாடல்களுடனும் பிரான்சியப் புரட்ச்சியாளர்களுடனான உறவுகளுடனும் நகர்ந்து ஈற்றில் டன் கேர்க் வெளியேற்றதுடனும் அடுத்த கட்டம் நகருகிறது.இங்கே இரண்டாம் உலக யுத்தத்தின் கொடூரங்கள் தத்துரூபமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. படுகொலை செய்யப்பட்டு வயல் வெளிகளில் கிடக்கும் மக்களைப் பார்த்தால் அய்ரோப்பாவிலும் நாம் பட்ட துன்பத்தைப் பட்டுத் தான் இன்றைய அமைதி நிலவுகிறது என்னும் உண்மை உறைக்கும்.டன்கேர்க் கடற்கரையில் வெளியேறத் துடித்துக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்களின் பல்வேறு மன நிலைகள் தத்ரூபமாக காட்சிப் படுத்தப்படிருக்கின்றன. தாம் இருக்கும் அவலமான நிலையை மறக்க குழந்தைகலைப் போல் ராட்டினத்தில் சுற்றி மகிழும் அவர்களின் நிலையைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.மிகவும் மென்மையான் மனித உணர்வுகளள வெளிப்படுத்தும் பின் புலமாக இந்த ட்ன்கேர்க் காட்சி அமைப்பு இருக்கிறது.

அடுத்த கட்டமாக படம் இங்கிலாந்திற்கு நகருகிறது.தனது தவறிற்கான பிராயச்சிதமாக பிரயணியும் ஒரு தாதி ஆகிறாள்.அங்கிருந்து கொண்டு ரொபி பிரான்சில் இருந்து வருவான் எனவும் அவனைக் கண்டு பிடித்து சிசிலையாவையும் ரொபியையும் ஒன்றாக இணைத்து ரொபி மேலான குற்றச் சாட்டை இல்லாது செய்ய வேண்டும் என்றும் எண்ணுகிறாள்.ஆனால் அவள் நினைத்தது நடக்கிறதா? இங்கிருந்து தான் படத்தின் பல திருப்பு முனைகளும் நாவலுக்குள் ஒரு நாவல் என்னும் அதீதப் புனைவும் வெளிக்கிளம்புகிறது.மிகுதியைத் திரையில் பார்ப்பதே சுவாரசியமானது.

படத்தின் சில காட்சிகள் இங்கே.



2 comments:

வசந்தன்(Vasanthan) said...

அண்மையில் தான் இப்படத்தைப் பார்த்தேன்.
எட்டு ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து இப்படத்தைத் தேடிப்பார்த்தேன்.

இன்னும் இரண்டுதரம் பார்க்க வேண்டும்; அப்பதான் முழுக்க விளங்கும் ;-(

அற்புதன் said...

படம் உன்னிப்பாகப் பார்க்கப்பட வேண்டியது.இடையூறுகள் இல்லாமால் நடு இரவில் பார்ப்பதே பொருத்தம்.

கதைக்குள் கதை, தொடர்பறுந்த ஓட்டம் என்பவற்றோடு இரண்டாம் உலக யுத்தம், பிரித்தானிய சமூக கட்டமைப்பு போன்ற பின் புல விடயங்களோடு பார்க்க வேண்டிய படம்.